வேளச்சேரி: வேளச்சேரி, அன்னை இந்திரா நகரை சேர்ந்த அச்சுதன் (70), வேளச்சேரியில் உள்ள காஸ் ஏஜென்சியில், சிலிண்டர் வாங்கி உபயோகித்து வருகிறார். நேற்று முன்தினம் இவரது வீட்டுக்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க பெண், தான் காஸ் ஏஜென்சியில் இருந்து வருவதாக அடையாள அட்டையை காட்டி, காஸ் இணைப்பு மற்றும் சிலிண்டரை பரிசோதனை செய்ய வந்ததாக தெரிவித்தார். இதை உண்மை என நம்பிய முதியவர், அப்பெண்ணை சமையல் அறையில் வந்து சோதனை செய்ய அனுமதித்துள்ளார். அப்போது அந்த பெண் காஸ் சிலிண்டர் மற்றும் இணைப்புகளை கையால் தொட்டுப் பார்த்துவிட்டு எல்லாம் சரியாக இருப்பதாக கூறினார். பின்னர், காஸ் சிலிண்டரை எடை பார்க்கும் கருவி ரூ.9,600க்கு வாங்கினால், அதில் ரூ.9000 உங்கள் கணக்கில் வந்துவிடும் என கூறியுள்ளார். அதன்படி அவர், அந்த பெண்ணிடம் ரூ.9600 கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்டு, அந்த பெண் அதற்கான ரசீதும் கொடுத்துவிட்டு சென்றார். சிறிது நேரத்தில், அச்சுதன் அந்த ரசீதில் இருந்த செல்போனுக்கு போன் செய்தபோது, சுவிட்ச் ஆப் செய்யப்ப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர் சம்பந்தப்பட்ட காஸ் ஏஜென்சிக்கு போன் செய்தபோது, அவர்கள் நாங்கள் யாரையும் அனுப்பவில்லை என தெரிவித்துள்ளனர். இதை அடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முதியவர் வேளச்சேரி காவல் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணமோசடியில் ஈடுபட்ட மர்ம பெண்ணை தேடி வருகின்றனர்….
The post காஸ் ஏஜென்சி ஊழியர் போல் நடித்து முதியவரிடம் ரூ.9,600 அபேஸ்: பெண்ணுக்கு வலை appeared first on Dinakaran.